Monday 25 March 2013

                            யுவதிகள்-அறிமுகம் 


    அது ஒரு அட்டை இல்லாத  மிகப்பெரிய புத்தகம். தலைப்போ எனக்கு புரியாத வார்த்தையில் இருந்தது. "யுவதிகள்". பத்து,பனிரெண்டு வயதில் இருந்த எனக்கு இது எதோ ஒரு குதிரையை குறிக்கும் சொல் என்று தோன்றியது. அலமாரியில் இருக்கும் பல கதைகளை  தீண்டும் போதும் இந்தக் "குதிரைக்"கதையை மட்டும் கவனமாக தாண்டி செல்லும் லாவகம் என் விரல்களுக்கு இருந்தது. என் வீட்டில்அதிகம் பேசப்பட்ட,விவாதிக்கப்பட்ட கதையாக யுவதிகள் இருந்தாலும்  எனக்கோ  காதல் கதைகளில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு  என்  காமிக்ஸ் கதாநாயகர்கள் அனாசயமாக அதிரடி செய்து கொண்டிருந்தபடியால்  இந்த கதை  என் ரசனைக்கு உட்பட்டது இல்லை  என்பது மட்டும் புரிந்தது.

     துப்பாக்கி சண்டை, கார் துரத்தல்கள்,  ஹெலிக்காப்டர் குண்டு வீச்சு, விமான சாகசங்கள் என்பது போன்ற சிறுவனுக்குரிய ஆர்வங்களில் எனது தேடல்கள் பெரும்பாலும் முத்து காமிக்ஸ் கதைகளோடு முடிந்து போய் விட்டாலும், ஒரே ஒரு பெரிய ருஷ்ய புதினத்தை படித்து விடுவதே என் கதை வாசிப்பின் முற்றுப்புள்ளி என்று தீவிரமாக சிந்தனை கொண்டிருந்தேன் நான். "தந்தையும் தனயர்களும்" எனக்கு  கொடுத்திருந்த பாதிப்பினால் எந்த பெரிய   ருஷ்ய புத்தககமும் என்னை கதிகலங்கச் செய்தது. இருப்பினும் நடைபெற வேண்டியது நடைபெற்றது.

     யுவதிகளை படிக்க எத்தனிக்கும் பொழுதெல்லாம் அது எங்கள் வீட்டின் எதோ ஒரு   சகோதரியின்  கைகளில் பாதியாக விரிந்த நிலையில் இருப்பதை காண்கையில் அது ஒரு பிரார்த்தனை புத்தகம் போலவே எனக்கு காட்சி அளிக்கும். புத்தகமோ மியுசியத்தில்  இருக்கவேண்டிய எல்லா தகுதிகளுடனும் காகிதம் காகிதமாக கைகளில் நில்லாது விழுந்துகொண்டே இருக்கும். அந்த புத்தகத்தின் அட்டையையே  வெகு நாட்கள் கழித்துத்தான் (அதாவது கல்லூரி நாட்களில் மறுபடியும் அந்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்கியபோது)  பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. இவ்வாறு ஒரு காகித கலவையாக இருந்த  ஒரு புதினத்தை படித்து புரிந்துகொள்வது என் புத்தக வாசிப்பிற்கு  ஒரு   அமிலத் தேர்வாக  இருந்தது.

     இன்னொரு சங்கதியும் உண்டு; யுவதிகளை படித்து விட்டாயா என்றெல்லாம் எங்கள் வீட்டில் யாரிடமும் கேட்கமுடியாது.  உண்மையை சொல்வதானால் யுவதிகளை எத்தனை முறை படித்தாய் என்று வேண்டுமானால் கேட்கலாம். இந்த சூழ்நிலையில்தான் நான் இப்போது ஞாபகம் இல்லாத ஒரு நாளின் மாலையில் இந்த தடித்த கதையை கையிலெடுத்தேன். எங்கள் வீடே சிலாகித்த ஒரு கதையை படிக்கப்போகும் அந்த  எண்ணமே எனக்கு ஒரு ராட்சத குதூகலத்தை கொடுத்தது.

     முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் யுவதிகள் என்ற தலைப்பு அதன்கீழ் போரிஸ் பெட்னி என்ற அந்நிய பெயர்.தொடர்ந்து தமிழில் கஜினி என்ற புனை பெயர். கீழே ராதுகா பதிப்பகம் அதன் விலாசம்.அதன் பின்   என் விரல்கள் யுவதிகளை தீண்டின. முதல் பக்கத்திலேயே கதையின் நாயகி  டோசியா ஒரு  புகை கக்கும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் காட்சி ஒரு நீண்ட அடர்த்தியான வர்ணனைகளோடு விவரிக்கப்படிருக்கும். படிப்பதற்கு கண்டிப்பாக பொறுமை வேண்டும். எனக்கு அந்த வயதில் அது இல்லை.
 
      ஆரம்பமே இப்படி தலைக்குள் சுத்தியல் அடிக்கிறதே என்ற எண்ணம் மேலும் இதை போய் எப்படியெல்லாம்தலை மேல்  தூக்கிவைத்துக்கொண்டு  கொண்டாடினார்கள் என் வீட்டில் என்று அலுப்பு கலந்த கோபம் வேறு. இரண்டு பின்னர் நான்கு பக்கங்கள் என்று தாவல்  தாவலாக புத்தகத்தை புரட்டினேன்.அதாவதுபடித்தேன்(என்றுநீங்கள்அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்).
 
     முடிவில் எனக்கு புரிந்ததெல்லாம் இதுதான்; காம்சாத்கா என்னும் நகரில் இருக்கும் கட்டுமர தொழிலாளர்களின் கும்மாளம் ,காதல், வேடிக்கை, துக்கம் கலந்த வாழ்கையை விவரிப்பதே இந்த புதினத்தின் மையக்  கோடு.  டோசியா என்ற ஒரு   குறும்புக்கார,அழகில்லாத பெண்ணை இலியா என்னும் வசீகர வாலிபன் காதலிக்கிறான்.எதனாலோ இருவருக்கும் திடீரென பிரிவு வர, இவன் இவளை தொடர, அவள் மறுக்க கடைசியில் டோசியாவும் இலியாவும் மீண்டும் காதலிக்கிறார்கள். இதன் நடுவில் இரண்டோ மூன்றோ கிளைக் கதைகள். என்னால் இதை தாண்டி வேறு எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஒரு மிகச் சாதாரணமான கதையை உலக மகா அபாரம் என்று புகழ ஒரு அபத்தமான கலை ரசனை இருக்கவேண்டும் என்று எண்ணினேன். இதை படிக்கும் உங்களுக்குமே இப்படித்தான் தோன்றும்.அது இயல்பானதே. ஆனால் இந்த கதையை சில வருடங்கள் கழித்து  இரண்டாம் முறை படித்த போதுதான் என் முன்னாள் ரசனை எவ்வளவு அபத்தமானது என்று எனக்கு உறைத்தது. இந்த முறை நிதானமாக வரி வரியாக வாசித்தேன். இந்த கதையை கொண்டாடுவதில் இருந்த உண்மை எனக்கு புரிய ஆரம்பித்தது. சாதாரண துப்பறியும் மர்ம கதைகளை விட்டு என் ரசனை வேறு  ஒரு மேலான அடுக்குக்கு செல்வதை உணர்ந்தேன்.

     மேலும் இன்னொன்றும் எனக்கு புலப்பட்டது அதாவது யுவதிகள் போன்ற ரஷ்ய புதினங்களை   புரிந்து கொள்வது என்பது  ஒரு நிலைதான்.அதோடு அந்த  வாசிப்பு முழுமை அடைந்து விடுவதில்லை . அதை விட   முக்கியமானது அந்த  கதையை  வரி வரியாக ரசிப்பது. படிக்கும் போதே கற்பனைக்கு சுதந்திரம் அளித்து , அந்த வார்த்தைகளுக்குள்  உயிர் பெற காத்திருக்கும் இலியா, டோசியா, அன்பிஸ்ஸா, பில், காத்யா, போன்ற மனிதர்களையும் மற்றும் அந்த முழு காம்சாத்கா நகரத்தையும் நமக்கு வெகு அருகே  உணரும் அந்த ஆக்சிஜன் அனுபவமே இந்த கதை வாசிப்பை நமக்குள் முற்றுப்பெற செய்யும்.அதுவே  இந்த யுவதிகள் புதினத்தை படிப்பவர்களுக்குள் ஒரு பரவச  வடுவை வலிகள் எதுவுமின்றி ஏற்படுத்துகிறது. இதுவே எனக்கு நிகழ்ந்தது. அந்த நிகழ்வே என்னை பல வருடங்கள் கடந்த   பின்னும் அதே வலிமையான சந்தோஷத்தோடு  இந்த புதினத்தை பற்றி இந்த இரவில் எழுத வைக்கிறது. எளிமையாக சொல்வதானால் யுவதிகள்  ஒரு அனுபவம் .ஆனால்  அப்படி உணர்ந்த கடைசி வாசகன்  நானாக   இருக்கக்கூடாது  என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன்.

      அடுத்தது ; இசை விரும்பிகள்.

 

 
     
     
     
     

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கற்றலின் மூலம் கிடைக்கும் சந்தோசத்தை உணர்த்தி உள்ளீர்கள்

    ReplyDelete